Friday, August 1, 2014

கோபத்தை கட்டுப்படுத்த

எதற்கும் எப்போதும் கோபப்படுபவரா நீங்கள், கோபம் வந்தால் செய்வதையும், சொல்வதையும் கட்டுப்படுத்த முடியவில்லையா? கிடைத்ததையெல்லாம் தூக்கிப்போட்டு உடைக்கிறீர்களா? அப்படியெனில் நீங்கள் பல விஷயங்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. கோபம் எல்லோருக்கும் வருவது இயற்கை, ஆனால் அளவுக்கு அதிகமான கோபம் கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் என்பதில் சந்தேகம் இல்லை. அளவுக்கு அதிகமாக கோபம் வர பல்வேறு காரணங்கள் உண்டு. 

இயலாமை, தாழ்வு மனப்பான்மை, தன்னம்பிக்கை குறைவு, என்பது இவற்றில் ஒரு சில என்றாலும் கோபப்படுவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். எனவே கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய வழிகளும் பல உள்ளன. அளவுக்கு அதிகமான கோபத்தை கட்டுப்படுத்த சில வழிகளை இங்கு காணலாம்.


நாவடக்கம் அவசியம்: 

dsboRLh.jpg
வாயில் இருந்து சொற்கள் விழுந்து விட்டால், அவற்றை திரும்ப எடுக்க முடியாது என்பது மிகச்சரியான ஒன்றாகும். கோபப்பட்டு ஒருவரை ஒரு வார்த்தை பேசி விட்டால் அதனை சரி செய்வது இயலாத ஒன்று ஆகும். அப்போதைக்கு இதற்கு பரிகாரம் காணப்பட்டாலும் பின்னர் அந்த வார்த்தைகள் மனரீதியான உறுத்தலை அளிப்பது இயல்பு. நீண்ட நெடிய சொந்த பந்தங்களையும் கோபத்தால் ஒரு சில வார்த்தைகள் பேசி விட்டால் அவை உடைந்து போக வழிவகுக்கும். எனவே கோபப்படும் போது அதிகபட்சம் பேசாமல் நாவடக்கத்துடன் இருப்பது நல்லது.

 
மனதையும் அடக்கலாம்

M3jAUAV.jpg


ஒருவர் தனது மனதை கட்டுப்படுத்த முயன்றால் எதனை வேண்டுமானாலும் சாதிக்கலாம். கோபப்படும் போதும் மனதை கட்டுப்படுத்துவது அவசியம். அவ்வாறு செய்தால் வாயில் இருந்து கண்டபடி வார்த்தைகள் உதிர்வது தடுக்கப்படும். நன்றாக யோசித்து பேச வேண்டியதை மட்டும் பேசலாம். இதனை ஒரு பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். கோபம் வரும்போது 6ல் இருந்து தலைகீழாக எண்ணுங்கள். கண்களை மூடியபடி உள்ளேயும், வெளியேயும் மூச்சுவிட்டு பாருங்கள், வாழ்க்கையில் கடந்து சென்ற நல்ல நிமிடங்களை எண்ணிப்பாருங்கள். இதன் மூலம் ஏற்படுகின்ற சிந்தனையோட்டத்தில் வரும் மாற்றம் கோபத்தை கட்டுப்படுத்தும்.



சுயபரிசோதனை செய்யுங்கள்: 


யாருக்காக, எதற்காக, எப்போது கோபப்பட்டோம்? கோபம் வரும்போது என்ன செய்தோம்? மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் கோபம் நம்மை பாதிக்கிறதா? அளவுக்கு அதிகமான கோபத்தால் சொந்த பந்தங்கள் அகன்று போகிறார்களா? இதுபோன்ற கேள்விகளுக்கு விடைகளை அறியப் பாருங்கள், இதனை ஒரு வழக்கமாக்கிக் கொள்ளுங்கள், இது உங்கள் கோபத்தை குறைக்க செய்யும்.

 
உடல்மொழியும் அவசியம்: 

EKexdmA.png
 
கோபமாக பேசவில்லை என்பது மட்டுமில்லாமல் வேகமாக நடப்பது, கதவை இழுத்து மூடுவது, கிடைத்ததை தூக்கிப்போட்டு மிதிப்பது, மேல்நோக்கி பார்த்து முனங்குவது போன்ற செயல்பாடுகள் நீங்கள் கோபமாக இருக்கிறீர்கள் என்பதை சுட்டிக்காட்டும். எனவே இதனையும் செய்யாமல் தவிர்க்க வேண்டும். நாம் இவ்வளவு சொல்லியும் கோபப்படவில்லை என்று மற்றவர்கள் மூக்கின் மீது விரல் வைக்க செய்வதும் ஒரு கலைதான்.


சந்தோஷ வழியை தேடுங்கள்: 

u6vzzYz.jpg?1

மனதில் சந்தோஷம் வருகின்ற வழிகளை தேர்வு செய்வதன் மூலம் உங்களுக்கு கோபம் வருகின்ற வழிகளை மூட செய்யலாம். வாழ்க்கையை அர்ப்பணிப்புடன் எதிர்கொள்பவர்களுக்கு இது மிகவும் எளிமையான ஒன்றாகும். எத்தனை பெரிய பிரச்னைகள் வந்தாலும் அதனை எளிமையாக கையாள உங்களால் முடியும். சாதாரண விஷயங்களையும் கோபப்பட்டு பிரச்னையை பெரிதாக்குவதை விட்டு சந்தோஷமுள்ள மனதை உருவாக்க வேண்டும். கோபத்தோடு இருக்கும்போது எடுக்கின்ற முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது என்பதை உணர வேண்டும். முன்கோபம் ஒன்றுக்கும் தீர்வு ஆகாது. அது மனதையும், உடலையும் நாளடைவில் பாதிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. கோபத்தோடு எழுகிறவன் நஷ்டத்தோடு உட்காருவான் என்று ஒரு பழமொழி உண்டு. இன்னும் கோபத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் நிபுணரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியம்.

No comments: